Sunday, August 22, 2010

குறுந்தொகை- நிலத்தினும் எனத் தொடங்கும் பாடல்...

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.(3)
குறுந்தொகையில் மூன்றாவது பாடல். தேவகுலத்தார் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான் தலைவன். ஆனால் திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை.அப்பெண்ணும் அவனைக் காதலிக்கிறாள் என்பது அப்பெண்ணின் தோழிக்குத் தெரியும். இப்படியே களவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கல்யாணம் தான் எப்போது?கவலை தோழிக்கு! தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான். தோழி பார்க்கிறாள் அவனை ! இதுதான் சமயம் என்று தலைவனைப் பழித்துப் பேசினாள் தோழி!பொறுப்பாளா தலைவி?
தலைவனோடு தனக்குள்ள உறவின் உயர்வைச் சொல்கிறாள் தோழியிடம்! ”இந்த நிலமும், வானும், நீரும் எப்பொழுதும் இங்கே இருந்தாலும் உரிய நேரத்தில் இயைந்து தானே இவ்வுலகத்திற்கு பயனினை அளிக்கின்றன. அதைப் போல எங்கள் நட்பும் திருமணம் செய்து கொண்டு வாழும் நாளில் நன்மையைக் கொடுக்கும் . அதுவரை பொறுத்திரு தோழி! ” என்று இயற்கையின் மூலம் வாழ்க்கையின் இயல்புணர்த்தி புரிய வைக்கிறாள் தோழிக்கு! மறைந்து நிற்கும் மணவாளன் செவியிலும் மங்கையின் அன்புக் குரல் கேட்கத்தானே செய்யும்? அதுவே அவர்கள் திருமணம் விரைவில் நிறைவேற வழி வகுக்குமல்லவா
கருத்துரை
” கரிய கொம்புகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நாடு என் தலைவனின் நாடு. அப்பூக்களில் உண்ட தேனினை, வண்டுகள் தொகுத்துத் தேனடையாகக் கொடுக்கிறது. இத்தனை வளம் நிறைந்த குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது”

பாடலின் பொருள் இது மட்டும் தானா? ஆயிரம் உட்பொருளை உள்ளடக்கிப் படைத்த அன்புக் கவிதை இது! எப்படி வண்டு குறிஞ்சிப் பூக்களில் தேனெடுத்து தேனடையாக்குகின்றதோ அப்படித்தான் குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பும் அன்பால் பெருகி இல்லற வாழ்வாய் சிறப்புறும் என்று தலைவி சொல்லும் முறை தேனினும் இனிது.
தலைவனோடு தான் கொண்ட நட்பினை இத்தன்மை என்று அளந்து கூற முடியாது என்பதைத் தோழிக்குச் சொல்லும் விதம்… எங்கே கற்றாள் இந்தத் தமிழின் ஆட்சியை! என்று சொல்லத் தோன்றுகிறது. நிலம், வானம் , நீர் மூன்றும் வெவ்வேறானவை தான். ஆனால் அவை இணையும் போது தான் உலகிற்குப் பயனளிக்கும் என்பது எனக்கும் தெரியும் . என் தலைவனுக்கும் தெரியும். எங்கள் நட்பும் இணைந்த நட்பு. இதில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து பயன் பெறுதல் இல்லை! என்ற உட்பொருளும் தோன்ற நிலம், வான், நீரைக் குறிப்பிட்டிருத்தலை என்னவென்று புகல்வது?
சரி, நிலத்தை விடப் பெரியது.வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது என்று பெரிது, உயர்ந்தது, ஆழமானது என்று குறிப்பிடுதலிலும் பொருள் உண்டு.” இவை எல்லாம் கூட ஒரு காலத்தில் வளம் குன்றலாம்.வானம் பொய்க்கலாம். நீரின் அளவு குறையலாம் . ஆனால், எம் நட்பு அப்படிப்பட்டதன்று. எப்பொழுதும் ஒரே நிலையில் சிறப்புடன் திகழ்வது ” என்பதை இயற்கையைக் காட்டி ”இயற்கையின் இனிது எம் நட்பு ” காதலை உயர்த்திச் சொல்லும் காதலியின் சொல்வன்மை நமக்கே இனித்ததென்றால் காதலனுக்கு…?

Monday, August 16, 2010

சங்க இலக்கியம்-குறுந்தொகை-வண்டிடம் பேசும் தலைவன்...?

                        சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ”நல்ல குறுந்தொகை” என்று பாராட்டப்பட்ட நூல் குறுந்தொகை. எளிய சொல்லாட்சியும் குறைந்த அடிகளும் உடையது. அகப்பொருளை இனிய காட்சிகளாக்கி விளக்கும் அழகிய இலக்கியம். தமிழரின் பண்பட்ட காதல் வாழ்வைப் பகரும் கவினுறு இலக்கியம். இதில் இரண்டாவது பாடல் இறையனார் என்பவரால் பாடப்பட்டது.
                   மலையும் மலை சார்ந்த இடமுமே குறிஞ்சி . தமிழரின் வாழ்க்கை தொடங்கி வளம் பெற்ற இடம் இது. அழகியல் கொட்டிக் கிடக்கும் இடமும் இது தான். குன்றுதோறும் குமரன் இருக்கும் காரணமும் அது தான். தமிழரின் பண்டைய எச்சங்களைத் தாங்கி நிற்பவையே, குறிஞ்சி நிலத் தலைவன் முருகனின் குன்றிலிருக்கும் கோவில்கள்!
குறுந்தொகையில் வரும் கொங்கு தேர் வாழ்க்கை என்ற இந்தப் பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது .திருவிளையாடலிலே வரும் திகட்டாத காட்சி இது. இங்கே குறுந்தொகை வழி அப்பாடலின் பொருளைச் சுவைப்போம்.
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?(குறுந்தொகை.2)

தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவன், தன் அன்பை வெளிப்படுத்த தலைவியின் இயற்கை அழகைப் பாராட்டும் இனிய பாடல்.காதற் கவிதைகள் எத்தனையோ கேட்ட போதும் , பாட்டினுள்ளே பல பொருள்களை மறைத்து இப்படியும் பாட முடியுமா என்று வியக்க வைக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.
தலைவன், தலைவியோடு இன்புற்று மகிழ்ந்த மகிழ்ச்சியில் வெளிப்பட்ட வார்த்தைகள் இவை. வண்டைப் பார்த்துப் பேசுகின்றான்…
” பூக்களிலே இருக்கின்ற தேனினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினைப் பெற்ற வண்டே!
நான் இன்புற வேண்டும் என்பதற்காகச் சொல்லாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறு-வாயாக. என்றும் என்னோடு பொருந்திய, உரிமை நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும் வரிசையான பற்களும் கொண்ட அவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?”
 கூடி மகிழ்ந்த போது, அவளின் கூந்தல் இவனுக்கு மலரினும் மணம் வீசியது. அந்த உள்ள மகிழ்வினை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.அவர்கள் இருவதலைவியோடுரும் இருப்பது மலை அடர்ந்த குறிஞ்சி நிலம். அங்கே மலர்ந்து கிடக்கும் கோடிக்கணக்கான மலர்களிலே தேனெடுக்க வண்டு வந்தது. பார்த்தான். வண்டு மலர் விட்டு மலர் தாவி ஆராய்ந்து தேனெடுக்கும் அழகைக் கண்டான். வண்டே! நீ ஆராய்ந்து தேனெடுக்கும் அறிவு பெற்றிருப்பதால் உன்னிடமே கேட்கின்றேன். என் தலைவியின் கூந்தலில் வீசும் மணத்தினைப் போல நீ தேனெடுக்கும் மலர்களிலே மணம் வீசும் மலர்களும் இருக்கின்றனவா? என்கிறான்.
 தான் கொண்ட நட்பு பயிலியது கெழிஇய நட்பு என்கிறான்.உள்ளம் பொருந்திதலைவியோடுய உரிமையான நட்பு என்று தனக்கும் தலைவிக்குமான உறவின் மேன்மையினை நாகரிகமான சொற்களால் நயமாக உணர்த்துகின்றான்.இவனும் தலைவியும் சந்தித்திருக்கும் இடம் மலைப்பகுதி என்பதால் மயில்கள் உலவுகின்றன.(இதனால்தான் முருகனுக்கும் மயிலை வாகனமாக வைத்தனர்.)அதைப் பார்க்கும்போது கூட தான் தழுவிய தலைவியின் இயல்புதான் நினைவுக்கு வருகிறது.அதனால்தான் தலைவியின் இயல்பினை,
மயில் இயல் என்கிறான்.
தலைவியைத் தான் சந்தித்தபோது தலைவியின் முகத்தில் தெரிந்த முறுவலும், தழுவிய போது உணர்ந்த அவள் உடலின் மென்மையும் கூந்தலில் நுகர்ந்த மணமும் இயற்கைச் சூழலில் தலைவனின் இயல்பான மன உணர்வினைக் காட்டும் இனிய படைப்பானது.தலைவிக்கும் தனக்கும் உள்ள உறவினை ”நட்பு” என்று குறிக்கும் பண்டைத் தமிழரின் பண்பட்ட நிலையினைக் காணும் போதெல்லாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவுமுண்டோ?