Wednesday, May 16, 2012

குறுந்தொகை-8


குறுந்தொகை-8,                                                                                                       
இயற்றியவர்-ஆலங்குடி  வங்கனார்                                                      
 மருதம் திணை - பரத்தை தலைவனைப் பற்றி சொன்னது

கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்                                                                   
பழன வாளை கதூஉம் ஊரன்                                                                      
எம்இல் பெருமொழி கூறி, தம் இல்,                                                   
கையும் காலும் தூக்கத் தூக்கும்                                                                              
 ஆடிப் பாவை போல,                                                                                       
 மேவன செய்யும், தன்புதல்வன் தாய்க்கே. (8)

உரை
வயலுக்கு அருகில் உள்ள மாமரத்தில் விளைந்த இனியப் பழமானது விழ,குளத்தில் இருக்கும் வாளை மீன் அதனைக் கவ்வும் ஊர்க்காரன், என் இல்லத்தில் பெரிய பேச்சு பேசிவிட்டு, தன் இல்லத்திலோ கையையும் காலையும் தூக்கி தூக்கி ஆடும் கையாட்டி பொம்மையைப் போல், தன் மகனின் தாய்க்கு (அவள் கூறியவாறு நடந்து )சிறப்பைச் செய்வான்.

சொற்பொருள் விளக்கம்: கழனி - வயல், மாஅத்து - மா மரத்தின், விளைந்து உகு - விளைந்து விழும், தீம்பழம் - இனியப்பழம், பழன வாளை - குளத்து வாளை மீன், கதூஉம் ஊரன் - கவ்வும், கடித்து உண்ணும் ஊர்காரன், எம்மில் - என் இல்லத்தில், பெருமொழி கூறி - பெரிய பேச்சு பேசி விட்டு, தம்மில் - தன் இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் - கையையும் காலையும் தூக்கி தூக்கி, ஆடிப் பாவை போல - ஆடும் பொம்மையைப்போல், மேவன செய்யும் - சிறப்பை செய்வான், தன் புதல்வன் தாய்க்கே - தன் மகனின் தாய்க்கு

Saturday, January 1, 2011

நற்றிணை-1


 குறிஞ்சித்திணைப்பாடல் -தலைவிக் கூற்று
    நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;          5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
    சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
இயற்றியவர் -கபிலர்
துறை -பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
ருத்துரை
சொல்லிய சொல்லிலிருந்து  மாறுபடாதவர். நம்மோடு நிலைத்த இனிமையான தன்மையுடையர். என் தோள்களை என்றும் பிரிதல் அறியாதவர். (வண்டு)தாமரைப்பூவின் குளிர்ச்சியான மகரந்தத்தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டுபோய் சேர்த்து வைத்த இனிய தேனைப்போல(தாமரைத்தாது-தலைவனின் உள்ளம், சந்தன மரம்-தலைவியின் உள்ளம், தேன்-இருவரின் அன்பு) நிச்சயமாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு. நீர் இன்றி இவ்வுலகமானது சிறக்கவியலாது. அதுபோல, அவர் இன்றி நாம் சிறத்தலில்லை.  அவரும் நம்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக கருணையோடு நடப்பவர். அப்படியிருக்க,  பிரிவதால் நம் மணம் வீசும் நெற்றியில் ஏற்படும் பசலை படர்வதற்கு அஞ்சுதலையுடைய அவர், பிரிதல் என்ற சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ?அவ்வாறு செய்தற்குக்கூட அறியாதவர் அவர்!
சொற்பொருள் விளக்கம்
        நின்ற சொல்லர்- மாறுபடாத சொல்லினை உடையர்; நீடு -  நிலைத்த; தோன்று இனியர்- இனிய தன்மையுடையர்;என்றும் என் தோள்-என்றும் என் தோள்களை, பிரிபு அறியலரே- பிரிவதற்கு அறியாதவர்,தாமரைத் தண் தாது-தாமரை மலரின் குளிர்ச்சியான மகரந்தத்தாதினை, ஊதி - துளைத்து, மீ-மேலிடம், மிசை- மேலே,சாந்தில் தொடுத்த-சந்தனமரத்தில் சேர்த்துவைத்த, தீம் தேன் போல-இனிய தேன் போல,புரைய –உயர்வு,மன்ற-நிச்சயமாக, புரையோர் –உயர்ந்தோர்,கேண்மை-நட்பு;        நீர் இன்று – நீர் இல்லாது,அமையா –சிறப்பாகாத,உலகம் போல- உலகத்தைப் போல,தம் இன்று- அவர் இல்லாது,  அமையா – சிறப்படையா, நம் –நம்மை,நயந்து அருளி-விரும்பி கருணையோடு,நறு நுதல் – மணம் வீசும் நெற்றி, பசத்தல் அஞ்சி-பசலை படரும் என்பதற்கு அஞ்சி,  சிறுமை உறுபவோ?-சிறுமையான  செயலைச் செய்தற்கு நினைப்பாரோ,  செய்பு அறியலரே- செய்தற்கு அறியாதவரே 


குறுந்தொகை-18



குறிஞ்சித்திணைப் பாடல். இயற்றியவர்- கபிலர்.
வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பபெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!
தலைவியை இரவுப்பொழுது சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவனிடம் தோழி, விரைவில் தலைவியை வரைந்து(மணம்செய்தல்) கொள்ளுமாறு கூறுவது
கருத்துரை
மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரிலுள்ள கொம்புகளில் பழங்கள் தொங்கும் வேர்ப்பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே!
விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை ஆக்கிக் கொள்க! உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருந்தவாறு , தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.
சொற்பொருள் விளக்கம்
 வேரல்வேலி- மூங்கில்வேலி, வேர்க்கோட்டு - வேரிலுள்ள கொம்புகளில், பலவின்-பலா மரத்தின், சாரல் நாட- மலைநாட்டவனே, செவ்வியை –வரைந்து கொள்ளும் காலத்தை, ஆகு-உண்டாக்கு, மதி-(அசைச்சொல்), சிறுகோட்டு- சிறிய கொம்பிலே, பெரும்பழம்- பெரிய பலாப்பழம், தூங்கி ஆங்கு- தொங்கிக் கொண்டிருந்தவாறு,  இவள்-தலைவி, உயிர் தவச் சிறிது- உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே-விருப்பமோ பெரியதே!
      மலைநிலம்.  கண்முன்னே தோன்றும் பலாமரமும் அதன் வேர்ப்பகுதியிலே சிறிய காம்பிலே தொங்குகின்ற பெரிய பலாப்பழமும் தோழிக்கு தலைவியின் உயிராகவும் தலைவன் மீது கொண்ட தலைவி கொண்ட மட்டற்ற அன்பாகவும் தெரிகிறது.இயற்கையான காதல் உணர்வை இயற்கையோடு பொருத்திப் பார்த்து இன்புற்று வாழ்ந்த நம்மவர் தம் ஈடு இணையற்ற இயல்பினை இயம்ப இயம்ப இன்பமன்றி வேறேது?

Thursday, December 9, 2010

குறுந்தொகை(14)

குறுந்தொகை பாடல்(14)
அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.
தலைவன் கூற்றாக அமைந்த குறிஞ்சித்திணைப் பாடல்.பாடலை இயற்றியவர் தொல் கபிலர்.
களவுக் காலத்து யான் தலைவியைப் பிறரறியாதவாறு கூடியதைக் குறித்து இவ்வூரார் அலர் தூற்றியிருப்பர். எங்கள் இருவரையும் பற்றி அலர் தூற்றும் இவ்வூராரின் முன், நான் என் தலைவியைப் (மடல் ஏறி) பெறுவேன். நான் அவளைப் (மடல் ஏறி) பெற்றபோது ‘நல்லோள் கணவன் இவன்’ என்று தெருவில் பலரும் கூறி நிற்பர்.
கருத்துரை
அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறியாவது) பெற்று விடுவேன். பெற்றபின் இந்த ஊரார் அறிந்து கொள்ளட்டும்.அவ்வாறு ஊரார் தெரிந்தபின் தெருவில் பல பேரும் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும்போது சிறிதுபொழுது நாணமடைவோம்.
சொற்பொருள் விளக்கம்
அமிழ்து பொதி-அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற்போன்று(இனிமையான சொற்களைப் பேசும்),செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த- அஞ்சுவதற்குக் காரணமான, வைஎயிற்று- கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை- சில சொற்களைப் பேசும் பெண்ணை,(என் தலைவியை),பெறுகதில்-பெறுவதற்கு விருப்பமுடையேன்.அம்ம- கேட்பாயாக. பெற்றாங்கு- பெற்றபின்,அறிகதில் அம்ம இவ்வூரே- அறிந்து கொள்ளட்டும் இவ்வூரவர், மறுகில்-தெருவில், நல்லோள் கணவன்-நல்ல பெண்ணின் கணவன் , இவன் என்று, பல்லோர் கூற-பல பேரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும், நாணுகம்-நாணமடைவோம்,சிறிதே- சிறிது பொழுது.
எந்த நுட்பமான உணர்வினையும் பாடலில் வடிக்கமுடியுமா என்றால் முடியும் என்கிறார் கவிஞர்.காதலியை அடையத் துடிக்கும் காதலனின் உள்ளத் துடிப்பே இப்பாடல். இப்பொழுது ஊராரெல்லாம் ‘இவன் காதலி இவள்’ என்றும் ‘இவள் காதலன் இவன்’ என்றும் மறைவாக சொல்லுகின்ற சொல்லுக்குப் பெரிதும் நாணமடைகின்றோம். ஆனால் நான் மடலேறி என் தலைவியைப் பெற்றபின் பலரும் தெருவில் வெளிப்படையாக ‘இவள் கணவன்’ என்று கூறுகின்றபோது சிறிது பொழுதே நாணமடைவோம். என்ன நயமிக்க வரிகள்! நம் சமுதாயத்தின் ஆணிவேரின் ஆற்றலை நினைக்கும்போது பெருமிதம், தானே தொற்றிக்கொள்கிறது.

Tuesday, December 7, 2010

குறுந்தொகை- (25 )யாரும் இல்லை எனத் தொடங்கும் பாடல்...

குறுந்தொகை(25)




யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.


தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியது. இப்பாடலை இயற்றியவர் கபிலர்.


கருத்துரை
தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான்.(பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!) அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும்.அதுவும் இல்லையே என்ற ஆதங்கம் பாடலில் தொனிக்கிறது.)


சொல்பொருள் விளக்கம்
யாரும் இல்லை-நானும் அவனும் இருந்த இடத்தில்) யாரும் இல்லை. தானே கள்வன்- (என்னைக் களவிலே கலந்த )கள்வனாகிய அவனே என்னோடு இருந்தான்.தான் அது பொய்ப்பின்- அவன் செய்த சூளுரை பொய்யானால், யான் எவன் செய்கோ-யான் என்ன செய்வேன்? தினைத்தாள் அன்ன- தினைப்பயிரின் நீண்டு வளர்ந்த தாளினைப் போல, (தினைப் பயிரின் நீண்ட இலைகளை இன்றும் தாள் என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.) சிறு பசுங்கால- சிறிய பசிய கால்கள், ஒழுகுநீர்-ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும்- ஆரல்மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு- குருகும் இருந்தது,தான் மணந்த –நானும் அவனும் களவில் கூடிய , ஞான்றே- நாளிலே.

குறுந்தொகை- யாயும் ஞாயும் எனத் தொடங்கும் பாடல்...

குறுந்தொகை(40) குறிஞ்சித்திணைப்பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயனீரார்.
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் பிரிந்துவிடுவானோ என்று அஞ்சுகின்ற தலைவியின் குறிப்பினை அறிந்து கொண்டு, தலைவன் தலைவியிடம் கூறியது
.ஊழ்வினையால் ஏற்பட்ட இந்தத் தொடர்பு என்றும் மாறாதது என்று கூறி, தலைவியின் அச்சத்தைப் போக்குகின்றான் தலைவன். அதுவே இப்பாடல்.
எதைச் சொல்லி, எப்படிச் சொல்லி தலைவியின் அச்சத்தைத் தெளிவிக்க என்று நினைத்த தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது.இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா ? அது போன்றதுதான் நம் அன்பும் என்கிறான். விளக்கம் கேட்பதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சொல்லும் தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே?
கருத்துரை
என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
சொல்பொருள் விளக்கம்
யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும் நீயும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்?செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் –தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் . பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?

Sunday, November 21, 2010

குறுந்தொகை- மாசுஅறக் கழீஇய(13) குறிஞ்சித்திணைப்பாடல்

குறுந்தொகை(13) குறிஞ்சித்திணைப் பாடல்
மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.


பாடலை இயற்றியவர் கபிலர்
தலைவன் தோழியிடம் அவள் மனம் அமைதியுறும் வகையில் தன் பிரிவினைக் கூறிப் பிரிந்து செல்கிறான்.இந்நிலையில், தலைவன் பிரிவால் வருந்திய தலைவி தோழியிடம் கூறியது.
மலை சார்ந்த சூழல் பின்னணியாய் அமைய, பெண்ணின் மனவுணர்வு காட்சியாய் விரிகிறது. மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.அங்கே குளிர்ச்சிக்குப் பஞ்சமில்லை.
தலைவியே சொல்கிறாள்… ‘குளிர்ச்சியான பாறைக்கல்லின் ஒரு பக்கத்தில் தலைவன் என்னோடு கூடியிருந்தான்.இப்போது என்னைப் பிரிந்து எனக்கு நோய் தந்தான். இதனால் ஏற்பட்ட வருத்தத்தினால் என் கண் மட்டுமல்ல;நின் கண்ணும் அல்லவா அழகிழந்தன.’என்று தன் தனிப்பட்ட துயரத்தோடு தோழியையும் உளப்படுத்திக் கூறுகின்றாள்.தலைவியின் இந்த அணுகுமுறையால் தோழியும் தலைவியின் துயரை நீக்குவதில் பெரும் முனைப்பு காட்டுவது இயல்புதானே?
பாடலின் கருத்துரை
தோழி! பெருமழை அலைத்தலால் மாசெல்லாம் நீங்கிய ஈரமான சொரசொரப்பான கரிய பாறைக்கல், (பாகனால்)புழுதி கழுவி சுத்தம் செய்யப்பெற்ற யானையைப் போல காட்சியளித்தது. அக்கல்லின் ஒரு பக்கத்தே கூடியிருந்தான் தலைவன். அவன்தான் நம்மைப் பிரிந்து துன்பம் தந்தான்.அதனால் குவளை மலர் போன்ற நம் அழகிய கண்களில் பசலை படர்ந்தன.
சொற்பொருள் விளக்கம்.
மாசுஅற- புழுதி முழுவதும், கழீஇய- கழுவப்பட்ட, யானை போல- யானையைப் போல, பெரும்பெயல்-பெருமழை, உழந்த-அலைத்த, இரும்பிணர்-கரிய சொரசொரப்பான, துறுகல்-பாறை (மலையின் சிறு பகுதி),பைதல்- ஈரம், ஒருதலை- ஒரு பக்கம், சேக்கும்- கூடும், நாடன்- தலைவன், நோய் தந்தனனே-நோய் தந்துவிட்டனனே, பசலை ஆர்ந்த- பசலை படர்ந்த, நம் குவளை –நம்முடைய குவளை போன்ற , அம் கண்ணே- அழகிய கண்ணே.
தலைவி தலைவனைப் பற்றிக் கூறும்போது ‘சேக்கும் நாடன்’ என்கிறாள். ஈண்டு குறிஞ்சித் திணையின் உயிர்ப்பொருளாம் உரிப்பொருள், பாவூடு நூலாய் கலந்துள்ள தன்மை நினைந்து இன்புறற்பாலது.