Wednesday, May 16, 2012

குறுந்தொகை-8


குறுந்தொகை-8,                                                                                                       
இயற்றியவர்-ஆலங்குடி  வங்கனார்                                                      
 மருதம் திணை - பரத்தை தலைவனைப் பற்றி சொன்னது

கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்                                                                   
பழன வாளை கதூஉம் ஊரன்                                                                      
எம்இல் பெருமொழி கூறி, தம் இல்,                                                   
கையும் காலும் தூக்கத் தூக்கும்                                                                              
 ஆடிப் பாவை போல,                                                                                       
 மேவன செய்யும், தன்புதல்வன் தாய்க்கே. (8)

உரை
வயலுக்கு அருகில் உள்ள மாமரத்தில் விளைந்த இனியப் பழமானது விழ,குளத்தில் இருக்கும் வாளை மீன் அதனைக் கவ்வும் ஊர்க்காரன், என் இல்லத்தில் பெரிய பேச்சு பேசிவிட்டு, தன் இல்லத்திலோ கையையும் காலையும் தூக்கி தூக்கி ஆடும் கையாட்டி பொம்மையைப் போல், தன் மகனின் தாய்க்கு (அவள் கூறியவாறு நடந்து )சிறப்பைச் செய்வான்.

சொற்பொருள் விளக்கம்: கழனி - வயல், மாஅத்து - மா மரத்தின், விளைந்து உகு - விளைந்து விழும், தீம்பழம் - இனியப்பழம், பழன வாளை - குளத்து வாளை மீன், கதூஉம் ஊரன் - கவ்வும், கடித்து உண்ணும் ஊர்காரன், எம்மில் - என் இல்லத்தில், பெருமொழி கூறி - பெரிய பேச்சு பேசி விட்டு, தம்மில் - தன் இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் - கையையும் காலையும் தூக்கி தூக்கி, ஆடிப் பாவை போல - ஆடும் பொம்மையைப்போல், மேவன செய்யும் - சிறப்பை செய்வான், தன் புதல்வன் தாய்க்கே - தன் மகனின் தாய்க்கு